எத்தியோப்பியாவின் ஒரோமியா பகுதியில் அம்ஹாரா இனக் குழுவைச் சேர்ந்த மக்கள் மீது கிளர்ச்சிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 230க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொடரும் இன ரீதியான பதற்றங்களுக்கு இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 230 சடலங்களை நான் கணக்கிட்டேன். எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்டிராத அம்ஹாரா இன மக்களுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல் இது என இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய கிம்பி கவுண்டியில் வசிக்கும் அப்துல்-செய்த் தாஹிர் என்பவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களை பாரிய குழிகளைத் தோண்டி ஒரேயடியாக நாங்கள் புதைக்கிறோம். நாங்கள் இன்னும் சடலங்களைத் தேடி வருகிறோம். மத்திய இராணுவப் பிரிவுகள் இப்போது வந்துள்ளன, ஆனால் அவர்கள் வெளியேறினால் மீண்டும் தாக்குதல்கள் தொடரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம் எனலும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வாறான படுகொலைகள் மேலும் தொடரும் என அஞ்சுவதால் அம்ஹாரா இனக் குழுவைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து இடம்பெயரத் தயாராகி வருவதாக ஷாம்பெல் என்ற மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் ஒரோமியா பகுதியில் 30 வருடங்களுக்கு முன்னர் குடியேறிய அம்ஹாரா இனத்தவர்கள் கோழிகளைப் போல கொல்லப்படுவதாக அவர் கூறினார்.
இரண்டு சாட்சிகளும் தாக்குதல்களுக்கு ஒரோமோ விடுதலைப் படை (Oromo Liberation Army) என்ற அமைப்பு மீது குற்றஞ்சாட்டினர்.
ஓரோமியா பிராந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையிலும் ஒரோமோ விடுதலைப் படை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமல் கிளர்ச்சிக் குழுவினர் இவ்வாறான கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா பல பிராந்தியங்களில் பரவலான இன பதட்டங்களை மக்கள் அனுபவித்து வருகிறனர். 110 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட எத்தியோப்பியாவில் இரண்டாவது பெரிய இனக்குழுவாக அம்ஹாரா மக்கள் உள்ளனர். ஓரோமியா போன்ற பகுதிகளில் அம்ஹாரா இன மக்கள் அடிக்கடி குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அம்ஹாரா இனமக்களுக்கு எதிராக படுகொலைகளை நிரந்தமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அத்தகைய தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசாங்கம் நியமித்த எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.